செவ்வாய், 28 ஜூன், 2016

பெண்ணுடலை வெட்டுகிறோமா? பெண்ணை வெட்டுகிறோமா?

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலையில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்படுகிறார். அதற்கு அடுத்தநாளே வினுப்பிரியா என்கிற பெண் சேலத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொள்கிறார். காரணம் அவருடைய முகநூலில், வாட்ஸப்பில் இருந்த புகைப்படங்களை மார்ஃபிங் மூலம் போர்னோ படமாக உருவாக்கி, அதை உலவவிடுகிறார்கள். சொந்தக்காரர் ஒருவர் பார்த்துவிட்டு, அக்குடும்பத்தினிடரிடம் சொல்ல பதைபதைத்துப் போகிறது அக்குடும்பம். உடனே காவல்துரைக்கு செல்கிறார்கள். ஸ்காட்லாந்து காவல்துரைக்கு இணையான நம் காவல்துறை 2000 ரூபாயும் ஒரு செல்போனூம் அன்பளிப்பாக(?) வாங்கிக்கொண்டு செயல்பட ஆரம்பிக்கிறது நத்தை வேகத்தில். அதற்குள் அந்த புகைப்படங்கள் பரவ… மானம் போய்விட்டதே என்று வினுப்பிரியா தற்கொலை செய்துகொள்கிறார். வினுப்பிரியா ஒரு பட்டாதாரி. ஸ்வாதியும் ஒரு பட்டாதாரி. நன்கு படித்தவர்கள். ஸ்வாதி விஷயத்தில் ’ஆணவக்கொலை புகழ்’ ராமதாஸ் கூட  ’அந்தப் பெண்ணை நடத்தைக்கொலை (character assassination) செய்யாதீர்கள்’ என அறிக்கைவிடுகிறார்.

இன்று பெண்கள் படிப்புக்காகவும் வேலைக்காகவும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டியுள்ளது. ’வெளியே வந்தால் பெண்ணுக்குப் பாதுகாப்பு இல்லை’ என்று குரல் எழுப்பும் அதே சமயத்தில்தான் வினுப்பிரியாவுக்கு தொழில்நுட்பத்தின் மூலம் அவரது உடல் குதறப்பட்டு, தற்கொலைக்கு தூண்டப்படுகிறார்; தற்கொலையும் செய்துகொள்கிறார். ஆக, வீட்டுக்குள் இருந்தாலும் வெளியே இருந்தாலும் பெண்ணுக்கு எந்த வகையிலும் பாதுகாப்பு இல்லை.

இந்த கொலைக்கும், தற்கொலைக்கும் பெண்ணுடல் ஒன்றே பெரும் காரணமா? என்று ஆழ்ந்து யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். 90களுக்கு முன்பு அதீத தொழிற்வளர்ச்சியும், நகரமயமாதலும் இல்லாத காலகட்டத்தில், பெண்கள் மீது இந்த அளவுக்கு வன்முறை நிச்சயமாக இருந்தது இல்லை என்று உறுதியாகக் கூறலாம். ஆனால் உலகமயம், தொழில்மயம் என்கிற உலக வியாபர யுக்திகள் அழகழகான பெயரில் இந்தியாவுக்குள் பொருளாதரக் கொள்கைகளாக வந்தவுடன் மொத்த இந்திய சமூகத்தின் வாழ்வியல் மதிப்பீடுகளில் பெரும் மாற்றம் தினம் தினமும் உருவாகிக்கொண்டிருக்கிறது; நல்ல வாழ்வியல் மதிப்பீடுகள் சுவடுகள் இல்லாமல் அழிந்துகொண்டிருக்கின்றன. அதன் எதிரொலிதான் பார்க்கும் திசையெங்கும் கொலைகள்; கொள்ளைகள்.

குறிப்பாக, பெண்கள் பற்றிய மதிப்பீடுகள் மாறத்தொடங்கின. பெண்கள் என்றாலே சிவப்பாக இருக்க வேண்டும் என்கிற வியாபார-சந்தை சிந்தனை இந்திய குக்கிராமங்கள் வரை ஷாம்பு, சிவப்பழகு க்ரீம் ஷாஸேக்களாக நடமாடத் தொடங்கின. ஆனால் இந்த சந்தை பெண் ஒரு போகப் பொருள், அழகுக்காக, படுக்கைக்காக படைக்கப்பட்ட வஸ்து என்கிற இந்திய- ஆணிய கருத்தாக்கத்தை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு  திடமாக உருவாக்கியது. பெண்ணை பொதுவெளியில் நடமாட அனுமதித்தது. ஆனால், பெண் உடம்பில் கட்டப்பட்ட பொம்மலாட்டக் கயிற்றை ஆண் மையக் குடும்பம் இறுகப் பற்றியிருக்கிறது. அதனால் இறந்த பெண்ணின் நடத்தை குறித்து தூமைத் துணியென அலசுகிறது.

இந்தியா- தமிழக படைப்புலகமான சினிமா, தொலைக்காட்சி தொடர் நாடகங்கள், மொழிமாற்றம் செய்யப்பட்ட தொடர்கள் உள்பட  வரவேற்பரையில் சம்மணம் போட்டு உட்கார்ந்துகொண்டு, பெண் ஒரு போகப்பொருள்… அதை உன் அதிகாரத்திலிருந்து வெளியே விட்டுவிடாதே என்பதை விதவிதமான காட்சிகளாலும் வசனங்களாலும் சொல்லிக்கொண்டிருக்கிறது. அதனால் ஆசைப்படுகிற பெண் கிடைக்கவிட்டால் ஆள் வைத்தாவது கொன்றுவிடு என்கிற செயல் மலிந்து, தினம் தினம் விதவிதமான கொலைகளாக வீதிதோறும் குடும்பம் தோறும் ரத்தக் கறையுடன், கலைந்த ஆடையுடன் கிடைக்கிறது.

தொழிற்வளர்ச்சியில் முன்னேறிக்கொண்டிருக்கிறோம் என்று பெருமை பொங்க பேசுகிறார்கள் ஆட்சியாளர்கள். ஆனால் பெண் என்கிற உயிரை உடம்பாக மட்டுமே பார்க்கும் கல்விமுறையைத்தான் இந்தியா முழுக்க  உருவாக்கிவைத்திருக்கிறார்கள். பெண் எப்போதும் தன் உடம்பை மறைத்தே வாழ வேண்டும். பெண்ணின் உடல் அவயங்கள் வெளியே தெரிந்தால்… அவளுடைய கற்பு போகும். அதன்மூலம் குடும்ப மானம் போகும். பெண்ணின் உடலில்தான் மொத்தக் குடும்பத்துடைய மரியாதையும், அவள் பிறந்த சாதியின் மரியாதையும் அந்த ஊரின் மரியாதையும் இருக்கிறது என்பதை திரும்பத் திரும்ப பருத்திவீரன்கள் சொல்லிக்கொண்டே இருப்பதால்தான், தன்னுடைய உடல் பொதுவெளியில் யாரோ கயவர்களால் கேடுகெட்டத்தனமாக காட்டப்பட்டபோது, பெண்உடல்-கற்பு- மானம் போய்விட்டது என்கிற நாறிப்போன கருத்தாக்கத்தால் ஒரு பெண் தற்கொலை செய்திருக்கிறாள்.

காலம் காலமாக இந்திய சமூகம் பெண்ணுடலை இதே கற்பிதத்துடன் வளர்ப்பதுதான் இந்த கொலைகளுக்கும் தற்கொலைகளுக்கும் மூலகாரணம். அதனால்தான் அந்த உடலை கல்லூரியில் பாடம் எடுக்கும் பெண் ஆசிரியர்கள், மாணவ ஆண் மனத்துக்கு  பயந்து சேலைக்கு மேல் கோட் போட்டு பூட்டிவைத்திருக்கிறார்கள்.

கண்காணிப்பு கேமிராக்களால் குற்றவாளியை கண்டுபிடிக்கமுடியும். ஆனால் குற்றவாளிகள் இல்லாத சமூகத்தை பள்ளியிலும், ஒவ்வொரு வீட்டிலும் தெருவிலும்தான் உருவாக்க ஆரம்பிக்க வேண்டும் என்பதை எப்போது கற்றுக்கொள்ளபோகிறோம்? யார் கொடுக்கப் போகிறோம்? 

வெள்ளி, 24 ஜூன், 2016

பாயும் ஒளி நீயெனக்கு

ப்ரியமே!

வெகு நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களுக்கு ஒரு நெடிய கடிதம் எழுதுகிறேன். வாசிக்கும் மனநிலையில் நீங்கள் இருக்கிறீர்களா? என்பது பற்றி எல்லாம் எனக்கு அக்கறை இல்லை அன்பே! எப்படி இருக்கிறீர்கள், நலமாக இருக்கிறீர்களா? என்றெல்லாம் கேட்கவா இந்த கடிதம்? இல்லை என் அன்பே… இல்லவே இல்லை.

என்னை விட்டு நெடுந்தூரம் போய்விட்டீர்கள். இன்னும் நான் அதே இடத்தில் அப்படியேதான் இருக்கிறேன் என்பதை சொல்லவா இந்த கடிதம்…? கண்டிப்பாக இல்லை… இல்லவே இல்லை.

பிறகு எதற்கு இந்தக் கடிதம் என்று கேட்கும் உங்களிடம் சொல்வதற்கு என்னிடம் எந்த பதிலும் இல்லை, அன்பை தவிர என்னிடம் எந்த பதிலும் இல்லை என் அன்பே. அன்பே… அன்பே என்று நாடகத்தனமாக நான் விளிக்கிறேனா? இல்லை…இல்லவே இல்லை. அன்பு என்கிற வார்த்தைக்கு முன் நீங்கள் நிற்கிறீர்கள். ப்ரியம் என்று வார்த்தையின் முன் நீங்கள் என்னைக் கட்டித் தழுவி ஆலிங்கனம் செய்கிறீர்கள். காதல் என்கிற வார்த்தைக்கு முன் நீங்கள் என்னை முழுவதுமாக களவாடுகிறீர்கள். என்னை வெறும் கடந்தகால நினைவிலேயே வாழ்ந்துகொண்டிருப்பவள் என்று என்னை சுற்றி வாழ்பவர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நான் அவர்களை வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் என்று கூட ஒத்துக்கொள்ளவில்லை.  சுவாசித்தால் மட்டுமே வாழ்தல் ஆகிவிடுமா? படுக்கையிலிருந்து எழுவதும், உண்பதும், பணத்துக்காக ஓடுவதும் உறங்குவதும், உடல் தேவையின்பால் இச்சை கொள்வதுமே வாழ்க்கை என்று நம்பும் உங்களைப் பார்த்து கேட்க என்னிடம் ஒரேயொரு கேள்விதான் இருக்கிறது. நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்களா? பிழைத்துக்கொண்டிருக்கிறீர்களா?

நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்பதை கர்வமாக சொல்வேன் என் அன்பே. எனக்குப் பிடித்தவனுடன் எனக்குப் பிடித்த மாதிரி வாழ்கிறேன் என் அன்பே. ’நான் தான் உன் அருகில் கூட இல்லையே .. பின் எப்படி வாழ்கிறேன் என்று சொல்வாய்…. அறிவில்லையா உனக்கு?’ என்று தானே கேட்கப் போகிறீர்கள்? உங்கள் கண்ணின் ஒளி என்னில் முழுவதுமாய் வியாபித்திருக்கிறது அன்பே. அந்த ஒளியுடன்தான் பெருங்காதலுடன் பேரன்புடன் பெரும் உவகையுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.
ஒரு மழை இரவில், ஆள் அரவமற்ற தெருவில் என் கைகளை இறுகப் பற்றி, உன் சுடும் மூச்சு என் வலது காதின் ஓரத்தில் பட்டு தீ ஜ்வாலையை  எரியச் செய்ததே… அந்த தழல் இன்னும் அணையவே இல்லை என் அன்பே… இன்னும் அப்படியே தகித்துக்கொண்டுத்தான் இருக்கிறது. அது அணையவும் அணையாது.
அதே இரவில் தான் என் வலதுகரம் பற்றி உன் மார்மேல் வைத்து உன் இதய துடிப்பை உணரச் சொன்னாய். இன்னமும் என் உள்ளங்கையில் அது அப்படியேதான் துடித்துக்கொண்டிருக்கிறது. அதன் துடிப்பை உங்களால் ஒருபோதும் உணரமுடியாது.

ஒரு பேருந்து பயணத்தில் என்னருகில் அமர்ந்துகொண்டு, உங்கள் அம்மாவைப் பற்றி பேசிக்கொண்டிருந்தீர்கள். நான் வாய்மூடி கேட்டுக்கொண்டே இருந்தேன். அது அப்போது ஒரு இசைக்குறிப்பை போலவே இருந்தது. இப்பவும் அப்படித்தான். அதே பயணத்தில் தான் மாலைப் பொழுதில் சூரியன் மஞ்சள் வண்ணம் பூசிய போது, அதன் தூரத்தில் இரு மேகங்கள் ஒன்றுக்குள் ஒன்று கலந்த கணம் என் கையை இறுகப் பிடித்து அழுத்திக்கொண்டே இருந்தீர்கள். சிறிது நேரம் கழித்துத்தான் உணர்ந்தோம்… நாம் கண்மூடி லயித்துக் கிடந்ததை. இன்னமும் அப்படியேதான் லயிக்கிறேன் மேகங்கள் கூடுவதைக் காணும் பொழுதெல்லாம்.

அந்த பேருந்து பயணத்தை தூரமாக்க பெயர் தெரியாத ஊருக்கு, இதுவரை நாம் பார்த்திராத ஊருக்குப் பயணமானோம். அப்போது நமக்கிடையே நீல நெருப்பொன்று எரிவதை உணர்ந்த நாம், முத்தமிட்டோம். முதன்முதலாக என் கன்னத்தில் முத்தமிட்டீர்கள்.  முத்தமிட்ட போது, உங்கள் கண்ணில் நீர் சுரந்தது. அந்த முதல் முத்தத்தில் கரைந்த தித்திப்பு நிமிஷங்கள் பொக்கிஷமாய், யாராலும் அழிக்கவே முடியாத இடத்தில் மிகவும் பத்திரமாக இருக்கின்றன. எப்போதும் அவை பத்திரமாக இருக்கும். யாராலும் அதை திருட முடியாது, உங்களால் கூட!.

இப்படி பலநூறு சந்தோஷங்களை சேமித்து வைத்திருக்கிறேன். எனக்கு அவை செல்வங்கள், பொக்கிஷங்கள், சந்தோஷ கிடங்குகள். யார் என்ன சொன்னால் என்ன? அவைதான் எனக்கே எனக்கேயான ஆனந்த பொக்கிஷங்கள்.


’’இத்தனை வருடங்கள் கழித்து எதற்கு பழைய கதையை பேசிக்கொண்டிருக்கிறாய்? தலையில் நரை விழுந்துவிட்டது. மகளுக்கு கல்யாணத்துக்குப் பெண் தேடிக்கொண்டிருக்கிறேன். இந்த சமயத்தில் எனக்கு என் இந்த கடிதம் என்று தானே கேட்கிறீர்கள்? இப்போது கூட இதை நான் கேட்காவிட்டால் எப்போது இனி உங்களிடம் கேட்க முடியும்? 
என் தெருவின் ஓரத்தில் மஞ்சள் கொன்றைப் பூக்கள் படுக்கை விரித்தது போல கொட்டிக் கிடந்த ஒரு மதியப் பொழுதில் மூச்சிரைக்க ஓடிவந்து சொன்னீர்கள். கண்ணீருடன் சொன்னீர்கள்… ’என்னால் உன்னை கல்யாணம் செய்துகொள்ள முடியாது. காரணம் கேட்கவில்லை நான். ’அம்மா காரணம்’ என்றீர்கள், ’அண்ணன் காரணம்’ என்றீர்கள். எனக்கு எதுவுமே காதுக்குள் போகவில்லை. கண்கள் முழுக்க துயரத்தை அப்பிக்கொண்டு அழுதுகொண்டே சொன்னீர்கள். அந்த அழுகையில் என் மீது நீங்கள் கொண்டிருந்த காதலை கரைத்துவிட்டீர்கள். அப்படிக் கரைக்கத்தான்  அழுதீர்களா என்று கேட்கவல்ல இந்தக் கடிதம்?

பிறகு எதற்குத்தான் இந்த கடிதம்? என்றுதானே கேட்கிறீர்கள்? ஒரே ஒரு கேள்விக்காகத்தான். அழுகையில் அனைத்தையும் கரைத்துக்கொண்ட நிமிடத்தில் இருந்து நீங்கள் நேசிக்கப்பட்டு இருக்கிறீர்களா? ஆத்மார்த்தமாக உங்கள் துணையை அணைத்திருக்கிறீர்களா? நிலவின் ஒளியில் முன் நெற்றியில் முத்தமிட்டு, முயங்கியிருக்கிறீர்களா? மௌனத்தின் மொழியில் காதலித்திருக்கிறீர்களா? மடியில் படுத்து, கண்கள் பார்த்து பார்த்து பேசி பேசி லயித்து இருக்கிறீர்களா?
நீங்கள் காதலிக்கப்படவும் இல்லை; ஆத்மார்த்தமாக நேசிக்கவும் இல்லை. அதிகாலையில் துணையின் தலை வருடிக் கொடுத்து நெஞ்சம் திளைக்கத் திளைக்க அணைத்து உச்சிமுகர்ந்திருக்கிறீர்களா? துணைக்கு ஒரு நேரம் ஒரு கை சோறு ஊட்டிவிட்டிருக்கிறீர்களா? இதில் ஏதாவது ஒன்றையாவது செய்திருக்கிறீர்களா?


’பணத்தின் பின்னால் ஓடத் துவங்கிய பின் இதற்கெல்லாம் நேரமெங்கே இருக்கிறது?’ என்று எல்லோரையும் போல நீங்கள் சொல்லிவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்தக் கடிதம் என் அன்பே.

எந்த எல்லைகளுமின்றி நிபந்தனைகள் ஏதுமற்ற நேசித்தலின் உன்னதம் தெரியாமல் வாழ்க்கையின் பாதியை கடந்துவிட்ட உங்களுக்கு இதைச் சொல்லவே இந்தக் கடிதம் என் அன்பே! கட்டாயத்தின் பெயரில், ஊர் மெச்சுவதற்காகவுமா காதல்? உணர்வதற்கும், ஆராதிப்பதற்கும், வாழ்வதற்கும் தான் காதல். அந்த காதலை நீங்கள் உணரவே இல்லை என்பதை சொல்லவே இந்தக் கடிதம் என் அன்பே. இந்த உடம்பை மண் தின்பதற்கு முன்பு நேசித்துவிடுங்கள். உள்ளம் நிறைய, வழிய வழிய நேசித்துவிடுங்கள். வாழ்தலின் நோக்கம் நேசம்தான் எனதன்பே. பணத்துகாக, ஊருக்காக, உலகத்துக்காக, அவனுக்காக, இவனுக்காக என்றில்லாமல் உங்களுக்கே உங்களுக்காக நேசியுங்கள் அன்பே! நேசமே மானுடத்தின் அறம் என்பதை சொல்லவே இந்தக் கடிதம். இதை நீங்கள் தான் எனக்குள் ஒளிரச் செய்தீர்கள். அப்படி எனக்குள் ஒளிர்ந்துகொண்டிருக்கும் உங்கள் கண்ணின் ஒளியை உங்களுக்கே திருப்பி அனுப்புகிறேன். பெற்றுக்கொள்ளுங்கள்.

ஒரு நெடும் கடிதத்தை எழுத எழுத அவளின் மனம் துள்ளிக் குதிப்பதை உணர்ந்தாள். மனதின் எல்லா திசைகளிலும் பேரிரைச்சலுடன் ஒலித்துக்கொண்டிருந்த சத்தம் சட்டென அமைதியாவதை உணர்ந்தாள். அவனது உருவத்தை நினைவுக்கு கொண்டு வந்து கண் முன் நிறுத்தும் போராட்டத்தில் அவள் வெற்றி பெற்றாள். அவனுடைய உயரத்தைப் பார்த்து மயங்கிய தன் கண்களை தொட்டுப் பார்த்துக்கொண்டாள். எப்போதும் நிதானமாகப் பேசும் அவனுடைய பேச்சு தன் காதில் ஒலிப்பதை கேட்டாள்; கேட்டாள். கேட்க கேட்க தன் உலகம் அழகாகவதாக உணர்ந்தாள். ஒரு ரயில் பயணத்தில் அவன் மடியில் படுத்து உறங்கியதை நினைத்து சிரித்துக்கொண்டாள். இனி இப்படி சந்தர்ப்பம் வாய்க்குமா என்று நினைக்கும்போதே அவளுடைய சிறு கண்கள் கடலானது. 

மீண்டும் கடிதத்தைப் படிக்க ஆரம்பித்தாள். ரயில் அசைந்து அசைந்து போய்க்கொண்டிருந்தது.
’’இந்த டிடிஆர் தெனமும் இந்த லூசு மூலி இப்படி முந்தானைய அவுத்துப் போட்டுட்டு வர்றத பாக்குறாரே… ஆம்பளைங்க கண்ணு பூரா இவ மார்மேல தான் இருக்கு… இவள எங்காச்சும் எறக்கி விடலாம்ல’’ சொன்னவளும் அவளது மாரைப் பார்த்தாள். ஏதோ ஒரு கோயில் சிற்பம் ஒன்று உயிரோடு எழுந்து வந்தது போலிருந்தது.

அந்த சிற்பத்தின்  மடியில் ஒரு பை இருந்தது. அதில் சில தாள்கள் இருந்தன. அவை இவளை ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் வாங்கியவள் என்றது. யார் நம்பப் போகிறார்கள்?


அவள் கடிதத்தை மீண்டும் வாசிக்க ஆரம்பித்தாள். அவளுடைய ஆங்கில கையெழுத்து நிஜமாகவே அத்துணை வடிவாக இருந்தது அவளது மார்புகளை விடவும்! 

ஆல்வா மிர்டல்

’பள்ளி படிப்போடு முடித்துக்கொள். கல்லூரிக்கெல்லாம் உன்னை அனுப்பிப் படிக்க வைக்க என்னிடம் காசு இல்லை’ என்று அம்மா கல்லூரிப் படிப்புக்கு தடை சொல்கிறார். ‘’நான் மேலே படிக்க பணம் தான் பிரச்னை என்றால் நானே என் செலவில் படித்துக்க்கொள்கிறேன். ஆனால் நான் படிக்கவேண்டும்; படிப்பேன்” என்று உறுதியாக அம்மாவிடம் சொல்லிவிட்டு கல்லூரிப் படிப்பை முடிக்கிறாள் அந்த பெண். காரணம் கல்வியின் மூலம் இந்த உலகில் நிலவும் சமத்துவம் இல்லாத நிலையை மாற்ற முடியும் என்று உறுதியாக நம்புகிறார். அவருடைய நம்பிக்கை விருட்சமானதில் வியப்பில்லை!


ஆல்வா மிர்டல் மிக சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பில்டிங் காண்ட்ராக்ட் வேலை செய்யும் அப்பாவுக்கும் நான்கு குழந்தைகளின் தாயாக இல்லத்தரசியாக இருக்கும் அம்மாவுக்கும் 1902ல் பிறக்கிறார். ஆனால் மற்றா குழந்தைகளை விட இவளுக்குள் ஒரு சமூக அக்கறை இருந்துகொண்டே இருக்கிறது. கல்லூரி படிப்பை முடித்ததும், குன்னார் மிர்டல் என்கிற பொருளாதர நிபுணரைத் திருமணம் செய்துகொள்கிறார். இருவருக்கும் மூன்று குழந்தைகள் பிறக்கின்றன. எல்லா நடுத்தரவர்க்கப் பெண்களைப் போலவும் ஆல்வாவுக்கு குடும்பப் பொறுப்பு கூடுகிறது. கணவர் மேல்படிப்புக்காக அமெரிக்கா செல்கிறார். ஸ்விடனில் பிறந்து, ஸ்வீடனிலேயே மூன்று குழந்தைகளின் தாயாக வாழ்கிற ஆல்வாவுக்கு அத்துடன் தன் படிப்பை முடித்துக்கொள்ள விருப்பமில்லை.

ஸ்வீடன், நாட்டில் இருக்கும் பள்ளிகளின் கல்விமுறை பற்றிப் படிக்கிறார் ஆல்வா. குடும்பம், கல்வி, குழந்தைகள் என சுமைகள் இருந்தாலும் அதனை வென்று வர வழி இருக்கிறது என்று நம்பினார். சைக்காலஜியில் முதுகலை பட்டம் பெற்றார். ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கத் தொடங்கினார். இவர் சைக்காலஜி படித்திருந்த காரணத்தினால் சிறையில் வேலை செய்யும் வாய்ப்புக் கிடைக்கிறது. அங்கும்  மூன்று ஆண்டுகள் வேலை செய்கிறார். இருந்தபோதும் அவருக்கு ஆசிரியராக வேலை செய்வதில் அதிக நாட்டம் இருந்ததால், சிறை வேலையை விட்டுவிட்டு, சிறு குழந்தைகளுக்கான ’ப்ரீ ஸ்கூல்’ ஒன்றை நிறுவி, அதில் பல கல்வி மேதைகள் கையாண்ட வழிமுறைகளை நடைமுறைப்படுத்துகிறார்.
இன்று இந்தியாவில் கல்வி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பேசுகின்ற கருத்துகளை 1930களின் இறுதியிலேயே பேசியுள்ளார். ஆதாவது குழந்தைகள் ஆசிரியர் சொல்லித்தருவதை மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் கருவிகளாக இருக்காமல், நாட்டின் முன்னேற்றத்தைப் பற்றியும் சுயமுன்னேற்றத்தைப் பற்றியும் தானாக் யோசித்து முடிவெடுக்கக் கூடிய கல்வியை அரசு வழங்க வேண்டும் என்று பேசினார். அதற்காக புத்தகங்களையும் எழுதினார். குழந்தைகளுக்கு தண்டனை கொடுத்து  ஒழுக்கத்தைப் போதிப்பதை விட, ஒரு நல்ல பழக்கத்தை திரும்பத்திரும்ப கடைபிடிக்க வலியுறுத்தினாலே போதும் என்று ஓங்கி சொன்னார்.

இவ்வாறான இவரின் பல நல்ல சிந்தனைகளால் சிறந்த கல்வியாளராக அறியப்பட்டார். அந்த சூழ்நிலையில் தான் இரண்டாம் உலகப் போரால், அணு ஆயுதங்களால் ஆன பாதிப்புகளை பார்த்து அதிர்ச்சியுற்ற ஆல்வா அதுகுறித்து நிறைய பேசவும் எழுதவும் செய்தார். அந்த காலகட்டத்தில் அமெரிக்காவையும், அப்போது ஒருங்கிணைத்து இருந்த ரஷ்யாவையும் ’உங்களின் அணுஆயுதங்கள் தான் உலகின் அழிவுக்குக் காரணமாக இருக்கிறது’ என்று தைரியமாக எதிர்த்து குரல் கொடுத்தார். இந்த நாடுகள் தன் சுயநலத்துக்காக அணுஆயுதங்களை ஊக்குவிக்கின்றன. அணு ஆயுதங்கள் இல்லாத நாட்டை, சூழலை உருவாக்குவோம் என்று தொடர்ந்து குரல்கொடுக்க ஆரம்பித்தார்.
அணு ஆயுதத்துக்கு எதிரான இவருடைய அழுத்தமான குரலையும் உறுதியையும் பார்த்து வியந்த ஐ.நா மன்றம், இவருடை அறிவை பயன்படுத்த நினைத்தது. இதற்காக யுனெஸ்கோ அமைப்பின் டைரக்டராக நியமித்தது. இதற்காக தன் கல்விப் பணியை இடைநிறுத்தி, ஸ்வீடனில் இருந்து பாரிஸுக்கு தனியாகச் சென்றார்; பணிபுரிந்தார். 1940களின் இறுதியில், அவர் யுனெஸ்கோவில் பணிபுரிந்த போது பெண்ணிய நோக்கில் பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு இருக்கும் பிரச்னைகள், படிக்காத, ஏழைப் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து நிறைய சிந்திகக் ஆரம்பித்தார். ’விமன்ஸ் டூ ரோல்ஸ்” என்ற புத்தகத்தை எழுதினார். அந்தப் புத்தகம் இன்றளவும் நிறைய போராளிகளுக்கு ஒரு பைபிள்.

இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு ஸ்வீடன் நாட்டுத் தூதுவராக பணியாற்றி இருக்கிறார். அப்போது நேருவையும் சந்தித்து இருக்கிறார் ஆல்வா. நேருவின் சோசளிசக் கொள்கை இவரை ஈர்த்திருக்கிறது. சர்வதேச அணு ஆயுத தடுப்பு மாநாடு ஜெனிவாவில் நடைபெற்றபோது அதில் ஸ்வீடன் சார்பாக பங்கேற்று தன் கருத்தை மிக வலுவாக எடுத்துரைத்து, பல ஆளுமைகளின் சிந்தனையை தூண்டி இருக்கிறார். இவர் எழுதிய Wars, Weapons, and Everyday Violence, and Dynamics of European Nuclear Disarmament, போன்ற புத்தகங்கள் உலகம் முழுதும் பலரால் வாசிக்கப்பட்டது.

கல்வி மட்டுமே பெண்களுக்கான விடுதலை, உலக நிம்மதிக்கு அணு ஆயுதங்கள் ஒழிய வேண்டும் என்கிற சிந்தனைக்காகவும் அதற்காக பாடுப்படமைக்காகவும் 1982 ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார்.

ஆல்வாவைப் போன்றவர்களால் நோபல் பரிசுக்குத்தானே பெருமை!

புதன், 22 ஜூன், 2016

தூங்கா மனம்

திலகா வளையலைக் கழற்றும்போது ஏற்கனவே கனத்து, கனன்று கொண்டிருந்த அவளின் இதயம் இன்னும் அதிகமாய் கனத்து சொல்லில் அடங்கா பாரத்தை நொடிக்கு நொடிக்கு ஏற்றிக் கொண்டிருந்தது. இந்த இரண்டு ஜோடி வளையல் ஆயா கொடுத்தது என்பதால் மட்டும் அல்ல; அது ஆயாவின் ரத்தம், வியர்வை, உழைப்பு, கனவு, நம்பிக்கை என அத்தனையும் கலந்து உருவாக்கப்பட்டவை. ‘ஒவ்வொரு அறுவடையின் போதும் ‘இந்த வாட்டி நாலு மூட்டை கூட கிடைச்சுடாதா” என்று குலசாமிக்கு தினம் தினம் வேண்டி, இரவும் பகலும் வயலிலேயே கிடையாகக் கிடந்து உழைத்து ஆசையாக செய்து கொடுத்த வளையல் இவை. 
‘திலகா ஆயா செஞ்சு கொடுத்த வளையலை விட இப்ப உன் புருஷன் உயிரு முக்கியமில்லையா?” என்று மனம் வழக்கம் போல் கேள்வி எழுப்பியதும் வளையலைக் கழட்டினாள்.  கழட்டும்போது, ‘இந்த ஆறு பவுனு வளையலை விட என் புருஷன் எனக்கு ரொம்ப முக்கியம், என் புள்ளைகளுக்கு அவரு இன்னமும் ரொம்ப முக்கியம். அதனால இந்த வளையல்னு இல்லை, இன்னும் என்கிட்டே இருக்குற அத்தனை பவுனு நகையையும் வித்து அவரை பொழைக்க வைக்கணும். பொழைக்க வைக்கணும்...” என்று மனதுக்கு பதில் சொல்வது போல் தன்னை தானே தேற்றிக் கொண்டாள்.  என்ன தேற்ற முயன்றாலும் மனது தேறுவதாக இல்லை. ‘பிழைப்பதற்கு ஐம்பது பர்சன்ட் தான் வாய்ப்பு இருக்கு, அதையும்  இருபத்திநாலு மணி நேரம் கழித்துதான் சொல்ல முடியும்’ என்று   டாக்டர்  கூப்பிட்டு சொன்னபோது கதறி அழுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை திலகாவுக்கு. டாக்டரின் அறையை விட்டு வெளியே வந்ததும் மனம் விட்டு கதறி கத்தி குரலெடுத்து அழுதபோது, அவளை  முன்பின் பார்த்தறியாதவர்கள் கூட அழுதார்கள்.  கதறலும் கண்ணீரும்  சில நேரங்களில் ஒரு தொற்று தான்! 
..........
‘எனக்கு இந்த மாப்பிள்ளை வேண்டாம் ஆயா” என்று பயத்தில்  கண்களில் நீர் முட்டிக்கொண்டு வர ஆயாவை இறுக்கமாக அனைத்துக்  கொண்டு அழுதது நினைவுக்கு வந்தது. ராஜன் திலகாவை ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் தனது  அம்மா, அப்பா, அக்கா, மாமா என குடும்பம் சகிதமாக பெண் பார்க்க வந்தபோது திலகாவுக்கு ராஜனைப் சுத்தமாகப் பிடிக்கவில்லை. பிடிக்காமல் போவதற்கு வலுவான காரணம் என்ன என்று யோசித்து யோசித்து பார்த்தாலும் இதுதான் காரணம் என்று உறுதியாக சொல்லமுடியவில்லை. உயரம், நிறம், மூக்கு, கண் என்ற வெளிப்புற தோற்றத்தைவிட ஒருத்தருக்கு இன்னொருவரைப் பிடிக்க எதோ  ஒன்று தேவைப்படுகிறது. அது எது என்பதுதான் திலகாவின் குழப்பமாக இருந்தது. அந்தக் குழப்பம் தான் பயமாகி, கண்ணீராகி அழ வைத்தது. அந்த பயத்துடனேயே தான் ராஜனைக் கல்யாணம் செய்தாள்.
முதல் உறவு, அவன் மேல் இருந்த பயத்தை அவளுக்குள் இன்னும் அதிகப்படுத்தியது. நாள் போகப் போக அந்த பயம் கொஞ்சம் கொஞ்சமாக விலகி, அவனை ஏனோ  ரசிக்க ஆரம்பித்தாள். அந்த ரசனையே அவனை மெல்ல மெல்ல காதலிக்க வைத்தது. ‘நீ ஆணி வேர்; நான் அழகிய கிளை’ என்று தத்துப்பித்துக் கவிதை எழுத வைத்தது. முதல் பிரசவத்துக்கு அம்மா வீட்டுக்கு வந்து இருந்த மூன்று  மாத  பிரிவை பெரும் சோகமாக கருதி, பல நேரங்களில் தனிமையில் அழவைத்தது. ‘டைமுக்கு சாப்பிட்டிங்களா.. நல்லா தூங்கினீங்களா” என்று ஒரே நாளில் பல கடிதங்களை எழுத வைத்தது. இருபது வருடங்கள் உயிருக்கு உயிராய் வாழ்ந்து வளர்த்த ஆயா, அம்மா, அப்பா சில நேரங்களில் அந்நியமாய் தெரிந்தார்கள்.
ராஜனை  சுற்றியே தனது உலகம் இருக்கிறது என்று நம்பியவள் ஒரு கட்டத்தில் ராஜன் மட்டுமே தனது அழகான அன்பான உலகம் என்று  கண் மூடித்தனமாக நம்பினாள். அந்த நம்பிக்கையையே தன் வாழ்வின் ஆகப் பெரிய சந்தோசம் என்றாள். தனக்குப் பிடித்த விஷயங்கள் மறந்து போய், ராஜனுக்குப் பிடித்த வியங்கள், எல்லாம் தனக்குப் பிடித்தவையாக மாற்றிக் கொண்டாள். ‘அப்படி மாற்றிக்கொள்வது கொஞ்சம் பைத்தியக்காரத்தனம் இல்லியா?” என்று அவள் மனம் கிண்டலாகக் கேள்வி எழுப்பினால்... ’பைத்தியக்காரத்தனைத்தையும்  காதலையும்  பிரிக்க முடியாது’ என்பாள். அதுதான் உண்மை என்றும் ஆணித்தரமாக நம்பினாள்.  அவரவர் மனதை மிஞ்சிய நண்பனும்  எதிரியும் இருக்கமுடியுமா?
..........
‘’நியுராலாஜி டாக்டர் உங்களை கூப்பிடுறார்’’ என்று திலகாவின் அருகில் வந்து ஒரு நர்ஸ் சொன்னபோது அவளுக்கு எழுந்து பத்தடி தூரத்தில் இருக்கும் டாக்டரின் ரூமுக்கு செல்வதற்கு கூட உடம்பிலும் மனதிலும் தேம்பில்லாதவளாக இருந்தாலும் உடம்பின் அத்தனை செல்களில் இருக்கும் ஒட்டுமொத்த சக்தியையும் திரட்டி முதல் அடி எடுத்து வைத்தாள்; நடந்தாள். அந்த நிமிடம் தான் அவள் வாழ்வின் பெரும்துயரம் தன்னை ஒரு கல்மலையின் பாரமாய்  அழுத்துவதாக உணர்ந்தாள். உலக உருண்டையே நம்பிக்கை அற்று, விரக்தியில் சுற்றிக்  கொண்டிருப்பதாய்   தோன்றியது அவளுக்கு.
‘’நீங்கதான் திலகாவா? கூட யாரும் வரலையா”” என்று கேட்ட நரம்பியல் நிபுணர், வெறும் நரம்பால் மட்டுமே ஆனவர் போல இருந்தார். ‘’ஆமாம் டாக்டர்’’ என்பது போல் இவள் தலை அசைத்தாள்.
’’உங்க ஹஸ்பண்ட் ஆபத்தான கட்டதைத் தாண்டிட்டார். ஆனா ‘மூளையில் கொஞ்சம் அடி பலமா பட்டிருக்கிறாதால அவரோட கை, கால் இயக்கம் முன்ன மாதிரி இருக்காது. ஒரு கட்டத்தில் செயல்படாம போனாலும் போகும். ஆனா அப்படி நிலைமை ரொம்ப மோசமா போயிடக் கூடாதுன்னா ஒரு மேஜர் ஆபரேஷன் செய்யணும். அதுக்கு கிட்டத்தட்ட ஐஞ்சாறு லட்சம் ஆகும். ஆபேரேஷன் முடிஞ்ச பிறகு அட்லீஸ்ட் ஒரு மாசம் இங்க இருக்கனும். ஆபரேஷன் பண்ணலாமா?”” என்று டாக்டர் கேட்டபோது,
‘’சரிங்க டாக்டர்’’ என்ற அவளது ஒற்றைச் சொல்லில் டன் கணக்கான நம்பிக்கையும், பணத்தை ரெடி பண்ண என்ன செய்வது என்கிற சுமையும் சம அளவில் இருந்தது.
அதே நம்பிக்கையுடனும் சுமையுடனும் உடனடியாக அப்பா, அம்மா போட்ட  நகைகளை யோசிக்காமல் விற்பதற்கு ஏற்பாடு செய்தாள். ஒரு கணம் தன் ஆறு வயது மகளின் சிரிப்பும் பெரிய கண்ணும் முகமும் நினைவில் வந்து பயமுறுத்தியது. ’போகட்டும்நான் உயிரோட இருந்தா இதை விட நாலு மடங்கு உனக்கு செய்வேன் மகளேஎன்று மனதுக்குள் சொல்லி தன்னைத்தானே தேற்றிக் கொண்டாள்.
.....
‘’திலகா நீ என்ன புடிச்சுத்தானே கல்யாணம் பண்ணின? எனக்கு முதன் முதலா உன்னப் பார்த்த போது பெரிசா எதுவும் தோணலை. ஆனா எங்கம்மாவுக்கு உன்னை ரொம்ப புடிச்சிருச்சு. ’என்ன அழகான கண்ணூடா அவளுக்குன்னு சொல்லிட்டே இருந்தாங்க. அவங்களுக்கு புடிச்சு போனதால ஆட்டோமேட்டிக்கா எனக்கும் புடிச்சுப் போயிருச்சுன்னு இப்பத் தோணுது.
எனக்கு ’வீடு படத்துல வர்ற அர்ச்சனா மாதிரி பொண்ணுங்கத்தான் ரொம்ப பிடிக்கும். அந்த முகவெட்டுல ஏதோ ஒரு கிறக்கம், ஒரு மயக்கம்.. ம்ம்ம்ம் அப்புறம் என்ன்னம்மோ இருக்கு. சொன்னா கோவிச்சுக்கமாட்டியே  அந்த மாதிரி பொண்ணு கிடைச்சா சும்மா சைட்டாவது அடிக்கணும். அட்லிஸ்ட் ஒரு நாலாவது அவ கூட இருக்கணும்” என்று ஒரு நடுராத்திரியில் ராஜா சொன்னபோது இருவரும் உறவு முடிந்த களைப்பிலும் திளைப்பிலும் இருந்தார்கள்.
‘’எனக்கு எந்த அப்செக்க்ஷனும் கிடையாது... ஏம்ப்பா  வீடு அர்ச்சனாகிட்டயே கேட்டுப் பாருங்களேன்” என்று திலகா சொன்னபோது அவள் வார்த்தையில் எந்த பொறாமையும்  இல்லை.
ஒருமுறை தாஜ்மஹால் பார்த்துவிட்டு வெளியே வரும்போது இவள் காதருகே வந்து  ’ஏய் திலக்ஸ் அங்க பாரேன்அந்த பொண்னு, நான் சொல்லுவேனே அந்த டேஸ்ட்ல இருக்குறா இல்ல. கொஞ்சம் நீள்வட்டமான முகம், பெரிய கண்ணு, கருப்பும் செவப்பும் இல்லாம ஒரு அழகு கலர்சான்ஸெ இல்லப்பாஎன்று சொன்ன நிமிடத்தில்  திலகா மும்தாஜைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள்.
இப்படி அவன் நீள்வட்ட முகம், கருப்பும் செவப்பும் இல்லாம அழகுக் கலர் என்று பலமுறை ரோடு, நடு வீடு, படுக்கை அறை, கோயில் என இடம், பொருள், ஏவல் இல்லாமல்…. சிலாகித்து, காதலாகி, கசிந்து உருகிக் கொண்டிருக்கும் வேளையில் எல்லாம் இவள் ராஜனின் மனைவியாக பொறாமைப்பட்டதும் இல்லை; செல்லமாய்க் கூட கோபித்துக் கொண்டதும் இல்லை.
...........
ராஜனுக்கு வெற்றிகரமாக ஆபரேஷன் முடிந்து, இரண்டு நாள் ஐசியுவில்,வைத்திருந்தார்கள். சொந்தகாரர்கள் நண்பர்கள் என எல்லோரும் கண்ணாடிக்கு வெளியே நின்று பார்த்துவிட்டு தில்காவுக்கு ஆறுதல் சொன்னார்கள். சிலர் ஆறுதல் என்ற பெயரில் பயமுறுத்தினார்கள்; சிலர் குழப்பினார்கள்; அழவைத்தார்கள்; பரிதாபப்பட்டார்கள். காலத்தை விட பெரிய பயங்கரவாதி யார் இருக்க முடியும்…? ஒரெ நிமிடத்தில் எல்லாவற்றையும் சட்டென கலைத்து அலங்கோலப்படுத்துகிறது. அடுக்கிவைத்து அழகும் செய்கிறது.
ராஜனால் ஒரு மாதத்துக்கு எழுந்து நடமாட முடியாது என்பதால் திலகாதான் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ள வேண்டும். படுக்கையில் கம்ம்மோடில் அவன் போயிருந்த மலத்தை அள்ளிப் போட்ட சில நிமிடங்களில் அறுவெறுப்பு இல்லாமல் சாப்பிட முடிந்தது அவளால். சில நேரங்களில் மட்டும் தன்னை இப்படி தனியாகக் கஷ்டப்பட விட்டுவிட்டு போய்விட்ட அம்மா  அப்பாவை திட்டித் தீர்ப்பாள் மனதுக்குள். வேறு வழி?!
இருந்தாலும் ஆஸ்பிட்டலிலும் நர்ஸுகள் நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள். காலை ஆறு மணிக்கே வந்து ராஜனை சோப்புத் தண்ணியால் துடைத்து, படுத்தே இருப்பதால்பெட் சோர்வந்து விடாமல் இருக்க ஸ்பெஷல் பவுடர் போட்டு அப்பி, காலை, மாலை என இரண்டு வேலையும் பி.பி, டெம்ப்ரெச்சர் செக் பண்ணுவார்கள். ஆஸ்பத்திரி வாங்கும் காசுக்கு நர்ஸுகள் உயிரைக் கொடுத்து வேலை பார்ப்பார்கள். சரியான நேரத்துக்கு வந்து மாத்திரை, மருந்தைக் கொடுத்து கரெக்டாக சாப்பிடுகிறார்களா என்று செக் பண்ணுவார்கள். அப்படி பார்த்துப் பார்த்து சேவை செய்யும் நர்சுகளுக்கு அதிகபட்சம் இருபத்தைந்து வயதுக்குள் தான் இருக்கும். கொஞ்சம் கூட ஐயறவு இல்லாமல் ராஜனை நிர்வாண நிலையிலும் துடைத்து, தினமும் புது துணி மாற்றி விட்டுச் செல்வார்கள்.
திலகாதான் எந்த நிலையிலும் நொந்துகொள்ளாமல் தன் நிலைமை இதுதான், எல்லாக் கஷ்டத்தையும் ராஜனுக்காகவும் மகளின் எதிர்காலத்துக்காகவும் தாங்கிக் கொண்டே ஆகவேண்டும்என்று மன உறுதியில் எந்த சுயபச்சாதபமும் கழிவிரக்கமும் இன்றி அலைந்துகொண்டே இருந்தாள்.
ஒரு ஞாயிற்றுக் கிழமை, காலையில் ஐந்து மணிக்கு ராஜன் திலகாவை எழுப்பினான்…’’திலகா கம்மோடை எடுத்திட்டு வர்றியா? லாய்லெட் வர்ற மாதிரி இருக்குஎன்றவுடன்  அவசரம் அவசரமாக எழுந்து கம்மோடை வைத்து, அவன் முடிச்சுட்டேன் எடுத்துடு’  என்று சொன்னதும், எடுத்து சுத்தம் செய்து விட்டு வந்தாள். வந்தவள், ஏங்க நர்ஸ் வந்த்தும் நான் வீட்டுக்கு போயிட்டு எட்டு மணிக்குள்ள  வந்துடுறேன். பக்கத்து ரூம்ல இருந்த ஒரு அம்மா சொன்னாங்க, மாட்டு வால் வாங்கி சூப் வச்சு குடிச்சா உடனே இடுப்பு எலும்பு கூடிடுமாம். அதனால அதை செஞ்சு எடுத்திட்டு வர்றேன். பாப்பாவுக்கு கொஞ்சம் சளி பிடிச்சிருக்கு அத்தை போன் பண்ணினாங்க. மருந்து வாங்கி கொடுத்திட்டு வர்றேங்க. புள்ளையப் பார்த்து நாலு நாள் ஆச்சுஎன்று சொன்னவள் தலையை வாராமல் கையாலேயே ஒதுக்கி, சேலை சரி செய்து கொண்டு வீட்டுக்கு ஓடினாள்.
இதுவரை கறிக்கடை பக்கமே போகாதவள் மாட்டு இறைச்சின்னு என்று சாக்பீஸால் போர்டு எழுதி வைத்திருந்த கடைக்கு சென்று மாட்டு வால் வாங்கி, குக்கரில் போட்டு வேக வைத்து சூப் செய்து, குழந்தையை குளிக்க வைத்து அத்தை சுட்டு வைத்திருந்த இட்லியை ஊட்டிவிட்டு, ’அப்பா வீட்டுக்கு சீக்கிரம் வந்திருவாருடா செல்லம்என்று சொன்ன போது தன்னையும் மீறி கட்டுடைத்து வந்த அழுகையை மகளின் நெஞ்சுக்குள் வைத்து புதைத்துக் கொண்டு வெளியேறினாள். இத்தனை செய்தவள் தன் வாயில் ஒரு இட்லியை பிட்டுப் போட மறாந்துவிட்டாள்.
அடித்துப் பிடித்து ராஜனின் அறைக்குள் நுழைத்தான். ராஜனுக்கு நர்ஸ் காலையில் சாப்பாட்டுக்கு அப்புறம் போட வேண்டிய மாத்திரிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். இவள் ஆரம்பித்தால்… ’ஏங்க சூப்பைக் குடிச்சுட்டு அப்புறம் இட்லியை சாப்பிடுங்க. உங்களுக்கு புடிச்ச தக்காளி குருமாஎன்று சொன்னவள் ராஜனைப் பார்த்தாள். ராஜன் இவள் சொன்னதை கவனித்த்தாகத் தெரியவில்லை. மீண்டும் கொஞ்சம் சத்தமாக ’’ஏங்க பாப்புக் குட்டி அப்பா இன்னிக்கு வந்துடுவாராம்மாநான் சாமிகிட்ட தினமும் கேட்டுகிட்டே இருக்கேன் எங்கப்பா இன்னிக்கு வீட்டுக்கு வந்திடுவாரான்னு அம்புட்டு பாவமா சொல்லுதுங்க. புள்ள அப்படிக் கேட்டதும் என் உயிரே என்னமோ ஆன மாதிரி இருந்துச்சுங்க…”” என்றவள் மீண்டும் ராஜனை கூர்ந்து கவனித்தாள். ராஜனுக்கு இவள் பேசிய எதுவும் காதுக்குள் போன அறிகுறி இருப்பதாய் தெரியவில்லை.
 நர்ஸ் மாத்திரைகளை எடுத்து வைத்துவிட்டு, ’மாத்திரை சாப்பிட்டு முடிச்சதும் சொல்லுங்கஒரு ஐவி ஊசி போடவேண்டியிருக்கு”  என்று சொல்லி விட்டுப் போனவளையே ராஜன் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

’’திலகா இவங்களப் பார்த்தா… ’வீடு அர்ச்சனாமாதிரியே இருக்கா  இல்ல. அதே முகவெட்டு, கறுப்பும் செவப்பும் இல்லாத அழகுக் கலர்….’’ ராஜன் சிலாகித்துக் கொண்டிருந்த அந்த நொடியில் திலகாவுக்குள் ஏதோ ஒன்று வெடிக்க ஆரம்பித்திருந்தது.  

செவ்வாய், 21 ஜூன், 2016

ரோஸா பார்க்கர்

ந்த பெண் ஒரு சாதரண நிறுவனத்தில் தையல் வேலை செய்யும் ஊழியர். தினமும் வீட்டுக்கும் நிறுவனத்துக்கும் பேருந்தில்தான் சென்று வர வேண்டும். 1900ஆம் ஆண்டு அமெரிக்காவின் மாண்ட்கோமரி நகரில் ஒரு சட்டம் பிறப்பிக்கிறார்கள். அந்த சட்டத்தின் படி நகரப் பேருந்துகளில் அமெரிக்க வெள்ளையர்கள் பேருந்தில் அமர்ந்து வர வேண்டும். கறுப்பினத்தவருக்கு பேருந்தின் கடைசி வரிசை சீட்டுகள் மட்டுமே. அதுவும் அமெரிக்கர்கள் பேருந்தின் முன் வாசல், பின் வாசல் பின் வாசல் என எப்படி வேண்டுமானும் ஏறி வரலாம். ஆனால் கறுப்பினத்தவர்கள் பேருந்தின் பின் வாயிலின் வழியாகத்தான் ஏற வேண்டும் என்று ஏகப்பட்ட சட்டங்களை விதித்து இருந்தது. அதற்கு எல்லோரும் உடன்பட்டுத்தான் தினமும் பயணித்து வந்தார்கள்.
ரோஸா பார்க்கர் என்ற அந்த தையல் வேலை செய்யும் பெண்ணும் தினமும் அப்படித்தான் பயணித்து  வந்தார். கறுப்பினத்தில் பிறந்த காரணத்துக்காகவே அனுதினமும் அவமானத்தையும் நிராகரிப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? அப்படிப்பட்ட புறக்கணிப்பை அவமானத்த்துக்கு அடிபணியாமல் போனால் என்ன ஆகும்? என்ன செய்வார்கள் அமெரிக்கர்கள் என்று ரோஸா சிந்திக்க ஆரம்பித்ததன் விளைவு, 1955ம் வருடம் டிசம்பர் 1ம் தேதி வெறும் 42 வயதான ரோஸா இந்த அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்தார். எப்படி? மாலை 6 மணி அளவில் நகரப் பேருந்தில் ஏறுகிறார். அவர் ஏறிய நிறுத்தத்தில் இருந்து மூன்றாவது நிறுத்தத்தில் நிறைய வெள்ளையர்கள் ஏறுகிறார்கள். அங்குள்ள சட்டப்படி, ரோஸா அந்த வெள்ளையர்களுக்கு இடம் கொடுத்துவிட்டு எழுந்து நின்று பயணம் செய்ய வேண்டும். வெள்ளையர்கள் நிற்கிறார்கள். ரோஸாவுடன் அருகில் உட்கார்ந்திருந்த மற்ற மூன்று, நான்கு கறுப்பினத்தவர்கள் எழுந்து நிற்கிறார்கள். ஆனால் ரோஸா இருந்த இடைத்த விட்டு நகரவே இல்லை. பேருந்து ஓட்டுநர் ஜேம்ஸ் எப். பிளேக் அங்கிருந்து சைகை காண்பிக்கிறார். ரோஸாவிடம் ’எழுந்து நில்’ என்கிறார். ரோஸா ’’நான் எதற்காக எழுந்து நிற்க வேண்டும்? என்று ஆர்ப்பாட்டம் இல்லாமல் கேள்வி கேட்கிறார். 


நீ இப்படி பேசினால், சட்டத்தை மீறுவதாக அர்த்தம். தெரியுமா? நீ இப்படியே உட்கார்ந்துகொண்டு வந்தால் நான் காவல்துறையிடம் புகார் செய்ய வேண்டி இருக்கும்” என்கிறார் நடத்துநர்.
ஓட்டுநர் ஜேம்ஸ் சொன்னது போல், போலீஸ் அடுத்த நிறுத்ததிலேயே வருகிறது. ரோஸாவைக் கைது செய்கிறது. ரோஸா எந்த உணர்வையும் வெளிக்காட்டாது காவல்துறையினருடன் செல்கிறார்.
அப்போது மாண்ட்கோமரி நகரத்து  கறுப்பின கிருஸ்துவ சபையில் வந்து சேர்ந்து இருக்கிறார் மார்ட்டின் லூதர் கிங். அவர் ’ரோஸாவின் கைதுக்கு எதிர்ப்பைக் காட்ட கறுப்பின மக்கள் யாரும் இனி நகரப் பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டாம்” என்று கோரிக்கை விடுக்கிறார். பல ஆண்டுகளாக இனத்தின் பெயரால், நிறத்தின் பெயரால் அவமானத்தை மட்டுமே சுமந்து வந்த மக்களுக்கு இதுதான் சரியான தருணம், தங்கள் எதிர்ப்பை வெளிகாட்ட என்று முடிவு செய்கிறார்கள். யாருமே அந்த பேருந்துகளில் பயணம் செய்யவில்லை. ஒருநாள் அல்ல, இரண்டு நாள் அல்ல. 381 நாட்கள் தொடர்ந்து தங்கள் எதிர்ப்பை காட்டுகிறார்கள்.
இதற்கு இடையில் ரோஸா பார்க்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறார்கள். சட்டத்தை மீறியதாக அரசு தரப்பு வக்கீல் வாதாடியபோது, ’ரோஸா எந்த தவறும் செய்யவில்லை, கறுப்பின மக்களுக்கு என்று இருந்த சீட்டில்தானே அமர்ந்து வந்தார், அதைதாண்டி அவர் ஒன்றும் செய்யவில்லையே’ என்று அவர் தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடி அவரை சிறையில் இருந்து வெளியே கொண்டு வந்தார்கள்.
இந்த நிகழ்வுதான் அமெரிக்காவின் நிற பேதத்துக்கு எதிராக போராட வேண்டும் என்ற எண்ணத்தை ஒவ்வொரு அமெரிக்கவாழ் கறுப்பினத்தவரின் மனதிலும் விதைத்தது. அதன் நீட்சியாகத்தான் மார்ட்டின் லூதர் கிங் தன் போராட்டத்தை ஆரம்பித்தார்.
கறுப்பின பென்ணாக இருந்துகொண்டு அதுவும் ஒரு சாதரண தொழிலாளியாக இருந்துகொண்டு ஒரு ஒட்டுமொத்த நகரத்தை எதிர்த்தால் என்ன ஆகும்?



அவர் வேலை பார்த்த இடத்தில் அவரை வேலையிலிருந்து நீக்கினார்கள். அதே போல் ரோஸாவின் கணவர் ரேமண்ட் பார்க்ஸுக்கும் வேலை போனது. வேறுவழியின்றி அவர்கள் வாழ்ந்த நகரத்தை விட்டு வெர்ஜீனியாவில் உள்ள ஹேம்ப்டன் என்ற நகரத்துக்கு இடம் பெயர்ந்தார்கள். ரோஸாவின் இந்த எதிர்ப்புக் குணம் அவரை மனித உரிமைப் போராளியாக மாற்றியது. தினமும் பல கூட்டங்களில் கறுப்பின மக்கள் விடுதலை பெற வேண்டும் என்பதற்காகவே உணர்ச்சிமிகுந்த உரைகளை ஆற்றினார். அந்த காலகட்டங்களில் பல்வேறு வேலைகளை செய்தார். ஒரு கல்வி நிறுவனத்தில் வேலை பார்த்தார். பிறகு ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கருக்கு செகரட்டரியாக வேலை பார்த்தார்.
பேசுவதற்காக கிடைக்கும் சொற்ப பணத்தையும் மக்களின் நலனுக்காகவே கொடுத்தார். நாளும் பொழுதும் பேசிக்கொண்டே இருந்த போதுதான் அவர் கணவர் 1977ல் தொண்டை புற்றுநோயால் இறந்து போனார். தன் தம்பி, தங்கைகளுடன் வசித்து வந்தார். அவருடைய தம்பியையும் புற்றுநோய்க்கு பலி கொடுத்தார். கடைசியில் தன் அம்மாவுடன் வாழ்ந்தார்.
தன் சொந்தவாழ்க்கையில் பொருளாதர பிரச்னைகளால் தவித்த போதும் அவர் கறுப்பின மக்களுக்காக உழைத்தார்; இடையாறாது பேசினார். ரோஸா கல்வி நிறுவனத்தை நிறுவி தன் பேச்சின் மூலம் கிடைக்கும் வருமானத்தை அந்த கல்வி நிறுவனத்துக்குக் கொடுத்தார். அமெரிக்க அரசின் உயரிய விருதான ’காங்கிரஸ்னல் கோல்ட் மெடல்” விருதைக் கொடுத்து அவரை கௌரவித்தது. ’மை ஸ்டோரி” என்று தன் சுயசரிதையை எழுதினார்.

அன்று அவர் பேருந்தில் எழ மறுத்து, அப்படியே உட்கார்ந்த்து இருந்ததால் தான் கறுப்பொன மக்கள் இன்று அமெரிக்காவிலொ நிமிர்ந்து நிற்கிறார்கள். அது ரோஸா பார்க்கரால்தானே சாத்தியமானது. இப்படியான சுயநலமற்ற போராட்ட குணம் நிறைந்த பெண்களால்தான் வீடும் உலகமும் நிமிர்ந்து நிற்கிறது

வங்காரி மாத்தாய்

ங்காரி மாத்தாயின் இளமை காலம் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த பெண் குழந்தைகள் அனுபவிக்கும் எல்லா துயர்களையும் கொண்டதாகத்தான் இருந்தது. ஆனால் அதையும் மீறித்தான் கிருஸ்துவ மிஷன் அமைப்புகளின் உதவியுடன் படித்தார். கால்நடை அறிவியலில் முனைவர் பட்டம் பெற்று, நைரோபி பல்கலை கழகத்தில் விரிவுரையாளராக வேலை பார்த்துக் கொண்டிருந்த போதுதான் வங்கி மாத்தாய் என்பவருடன் காதல் கொண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு, வேலையை தொடர்ந்த வங்காரி, தான் வேலை பார்த்த கல்லூரியில் பணிபுரியும் பெண்களின் சம உரிமைக்காகப் போராடினார். அந்த போராட்டக் குணம் தென் ஆப்பிரிக்காவில் இருந்த பல சிவில் உரிமை அமைப்புகளுடன் சேர்ந்து பணிபுரிய வைத்தது. இதற்கு இடையில் வங்காரியின் கணவர் பார்லிமெண்ட் எலக்‌ஷனில் நின்று முதல் முறை தோற்றுப் போனார். இரண்டாம் முறை  வெற்றி பெற்றார்.  அப்போதுதான் அவர் வேலை இல்லா இளைஞர்களுக்கு வேலை அளிப்பதாகக் கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்ற, வங்காரி மரக்கன்றுகள் நடும்திட்டத்தை உருவாக்கினார். அதுதான் உலகத்துக்கே வழிகாட்டியான ‘Green Belt” இயக்கமாக மாறியது.

வங்காரியின் போராட்டக் குணம்தான் அவருடைய இல்வாழ்க்கையை குலைக்கும் கோடாரியாக அமைந்தது. பத்தாண்டுகளைக் கூட முழுமையாக நிறைவு செய்யாத இல்வாழ்க்கையில் இறுதியில் அவருடைய கணவர் விவாகரத்துக் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். அதற்காக அவர் சொன்ன காரணம், ’இத்தனை மன உறுதியும் போராட்ட குணமும் கொண்ட பெண்ணுடன் என்னால் வாழ்வது சாத்தியம் இல்லை” என்று சொன்னார். அப்போதும் மன உறுதி குலையாத வங்காரி, தொடர்ந்து தன் மக்களுக்காக உழைக்க ஆரம்பித்தார்.

சூழல் அழிக்கப்படும் போது அதனால் பெருமளவில் பாதிக்கப்டுவது பெண்களாகத்தான் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்த அவர், தன்னுடைய கல்லூரி வேலையை உதறித் தள்ளினார். முழுமூச்சாக மரக்கன்றுகள் நடுவதற்கு பெண்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது, அவரைப் பார்த்து,’பெண்களுக்கு மரக்கன்றுகள் வளர்த்து நடுவது பற்றி எல்லாம் தெரியாது. அதெல்லாம் வனத்துறையால் மட்டுமே சாத்தியம்”  என்று குதர்க்கமாகவும் இகழ்வாகவும் பேசினார்கள் வனத்துறை அதிகாரிகள்.  ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல், அவற்றை எல்லாம் தொடர்ந்து போராடுவதற்கான  ஊக்க மருந்தாக நினைத்து இரவு பகல் பாராது மரக்கன்றுகள் நட்டார். கென்யநாட்டின் ’தேசிய பெண்கள் கமிஷனு’டன் இணைந்து கிராமப் பெண் குழுக்களுக்கு பயிற்சி கொடுத்தார். அந்த சிறு குழு கிராமத்தில் இருக்கும் மற்றொரு பெண் குழுவுக்கு பயிற்சி கொடுக்கும். இப்படியாக 35 வருடங்களில் பல கோடி மரக்கன்றுகளை வளர்த்து நட்டனர். அதுமட்டும் இல்லாமல் 6000க்கும் மேற்பட்ட நாற்றங்கால்களை Green belt இயக்கப் பெண்கள் பராமரித்தனர். இது எத்தனை பெரிய சாதனை.! இந்த மரக்கன்று நடும் சக்தி, தங்களின் எதிர்காலத்தை தங்கள் கைகளாலேயே சக்திமிக்கதாகவும் நம்பிக்கை மிக்கதாகவும் மாற்றமுடியும் என்ற எண்ணத்தை வலுப்படுத்தியது.
1980, 90களில் கென்யாவை ஆண்ட சர்வாதிகாரி டேனியல் அராப் மோயின் அதிகாரத்துக்கும் அடக்குமுறைக்கும் எதிராக வங்காரி மாத்தாய் குரல் கொடுக்க ஆரம்பித்தார். அதற்காக அவர் சொன்ன காரணம் தான் மிக உண்மையும் நேர்மையுமானது. ’நாட்டு மக்களிடம் அதிகாரத்தை வழங்கி, ’இந்த இயற்கை வளங்கள் எல்லாம் உங்களுடையதுதான்” என்று சொல்லி உணர வைத்து, இயற்கை வளங்களை அவர்களை வைத்துதான் பாதுகாக்க வேண்டும்” என்ற முழக்கத்தை அவர் ஓங்கி ஒலித்த போது அவருக்கும், சர்வாதிகாரி டேனியலுக்கும் இடையே மோதல் ஆரம்பித்தது. அந்த மோதல் அவரை அரசியலில் பங்கெடுக்க வைத்தது.

அந்த சமயத்தில்தான் டேனியல் தன் கட்சி அலுவலகத்துக்காக நெடிதுயர்ந்த 62 மாடிக் கட்டிடம் கட்ட திட்டம் தீட்டினார். அதற்காக நைரோபி நகரில் இருந்த உருகு என்ற பெரிய பூங்காவை அழிக்கத் திட்டமிட்டார். அதனை எதிர்த்து வங்காரி பெரும் போராட்டம் நடத்தினார். அவர் மீதும் போராட்ட்த்தில் பங்கு பெற்ற பெண்கள் மீதும் தடியடி நடத்தப்பட்டது, கண்னீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன. கொடூரத்தின் உச்சமாக அவர்கள் பாதாள சிறையில் அடைக்கப்பட்டனர். போராட்டத்தின் யுக்தியாக சிறையில் அரசியல் கைதிகளாக இருந்தவர்களின் அம்மாக்களை ஒருங்கிணைத்து ஒரு அமைப்பை உருவாக்கி போராடி சிறையில் இருந்தவர்களை மீட்டு எடுத்தனர். வங்காரியின் அசைக்க முடியாத உறுதி கண்டு அச்சமுற்ற வெளிநாட்டுக் கம்பெனிகள், 62 மாடிக் கட்டிடம் கட்டும் திட்டத்தைக் கைவிட்டன.

அதன் பிறகு பல போராட்டங்களில் பலமுறை சிறைக்கு சென்றார் வங்காரி. அதற்கு காரணமாக இருந்தவர் டேனியல். இந்த போரட்டங்கள் அவரை அரசியலில் நுழைய வைத்தது.. அதன் காரணமாக 1997ல் தேசிய நாடளுமன்ற உறுப்பினர் பதவிக்கும், கென்ய லிபரல் கட்சியின் அதிபர் வேட்பளராகவும் பலரின் வற்புறுத்தலின் பேரில் போட்டியிட சம்மதித்தார். ஆனால் தேர்தலுக்கு சிலநாட்கள் இருக்கும் போது, அவருக்குத் தெரியாமலேயே அவரைப் போட்டியில் இருந்து அவரது கட்சி விலக்கி விட்டது. இருந்த போதும் மனம் தளராத வங்காரி கென்யாவில் 2002ல் நடைபெற்ற தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிட்டவருக்கு உலகமே ஆச்சர்யப்படும் வகையில் 98 சதவிகித ஒட்டுக்கள் விழுந்தன.  கென்யாவில் கிபாகி தலைமையில் புதிய அரசு அமைந்ததும் வங்காரிக்கு சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள், கானுயிர்களுக்கான துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். தனது இயக்கத்தின் வழியாக கற்றுக்கொண்ட கொள்கைகளான, ’அடிமட்ட மக்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும், எந்த முடிவையும் மக்களின் பங்கேற்புடன்தான் எடுக்க வேண்டும்” என்ற கொள்கைகளைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயல்பட்டார்.

பெண்களின் உரிமைகளுக்காக எந்த சட்டமும் இல்லாமல் இருந்த நாட்டில் பெண்கள் பாதுகாப்பாகவும் சம உரிமையுடனும் வாழ சட்டம் கொண்டு வர பாடுபட்டார். அதன் காரணமாக இன்று கென்யாவில் அரசியலில் ஈடுபடும் பெண்களின் பங்கு அதிகரித்து இருக்கிறது. பெண்கள் கல்வி கற்று, வேலைக்கு செல்வதால் அவர்களின் சமூக, பொருளாதர நிலை மேம்பட்டு இருக்கிறது.

வங்காரி பல சர்வதேச அமைப்புகளில் பணியாற்றியுள்ளார். தன் வாழ்நாள் முழுதும் சுற்றுச் சுழலுக்காக உழைத்துக்கொண்டுருந்தார். பல ஆயிரம் பேருக்கு வாழும் உதாரணமாக வாழ்ந்தவருக்கு 2004ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. பல சர்வதேச அளவிலான விருதுகளையும் பெற்ற வங்காரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 2011 செப்டம்பர் 25ம் தேதி இறந்தார். இல்லை, இன்னும் நம் மனதில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்.

வங்காரி தன் வாழ்விலிருந்து சொன்னது, ”சம்பவங்கள் உனக்கு எதிர்மறையாகி நிற்கும் போது, மூலையில் முடங்கி உட்கார்ந்து வாழ்க்கை முழுவதும் புலம்பிக்கொண்டு இருக்காதே. எழுந்து நட… தொடர்ந்து நட… இனி எதிர்வரும் பாதை கஷ்டமானதாக இருக்காது என்ற நம்பிக்கையுடன் நட”

அப்படி ஒரு நம்பிக்கையுடன் நாமும் நடப்போம்!


(இன்னும் பேசுவோம்)